Tuesday 14 September 2010

வாரியர்ஸ் அணி அசத்தல் வெற்றி



போர்ட் எலிசபெத்:
விக்டோரியா அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' லீக் போட்டியில் வாரியஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 2வது வெற்றியை பெற்றது.
தென் ஆப்ரிக்காவில், சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் நேற்று நடந்த லீக் போட்டியில் "ஏ' பிரிவில் உள்ள வாரியர்ஸ் (தென் ஆப்ரிக்கா), விக்டோரியா (ஆஸ்திரேலியா) அணிகள் மோதின. "டாஸ்' வென்ற வாரியர்ஸ் அணி கேப்டன் டேவி ஜேக்கப், பேட்டிங் தேர்வு செய்தார்.
ஜேக்கப் அரைசதம்:
முதலில் பேட் செய்த வாரியர்ஸ் அணிக்கு கேப்டன் ஜேக்கப், பிரின்ஸ் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்த போது, ஒரு சிக்சர், 9 பவுண்டரி உட்பட 39 பந்தில் 59 ரன்கள் எடுத்த ஜேக்கப் அவுட்டானார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த பிரின்ஸ் (16) ஆறுதல் அளித்தார். அடுத்து வந்த இங்கிராம் (8) நிலைக்கவில்லை. பின்னர் களமிறங்கிய மார்க் பவுச்சர் (31), ஜோகன் போத்தா (20) அணியின் ஸ்கோரை உயர்த்தினர். மற்ற வீரர்கள் ஓரளவு ரன் சேர்க்க வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்தது. விக்டோரியா அணி சார்பில் அதிகபட்சமாக மெக்டொனால்டு 2 விக்கெட் வீழ்த்தினார்.
திரான் துல்லியம்:
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய விக்டோரியா அணிக்கு ராப் குயினே (1) மோசமான துவக்கம் கொடுத்தார். மற்றொரு துவக்க வீரர் பிராட் ஹாட்ஜ் (16) பெரிய அளவில் சோபிக்கவில்லை. அடுத்து வந்த ஆரன் பின்ச் (25), கேப்டன் டேவிட் ஹசி (29), மெக்டொனால்டு (19) ஆறுதல் அளித்தனர். மற்ற வீரர்கள் ஏமாற்ற விக்டோரியா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்து, 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. வாரியர்ஸ் அணி சார்பில் திரான் 3, நிடினி 2 விக்கெட் வீழ்த்தினர்.

No comments:

Post a Comment